Thursday 26 February 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை

வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடனைப் பற்றிக் கூறும் போது, கடன் நெருஞ்சி முள்ளைப் போன்றது என்பார். நெருஞ்சி முள் சிறிதானலும், அது உடம்பில் உள்ளவரை, கொடுக்கும் வலி தாங்க முடியாதது. அதேபோல, கடன் நமது வாழ்க்கையில் வந்துவிட்டால், அது கொடுக்கும் மன இறுக்கம் மிக அதிகம். கம்பன் கூட 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று ராவணன் ராமனிடம் தோல்வி கண்டபோது கலங்கியதை உவமையுடன் விளக்கினார். எந்தப் பொருளை வாங்கும்போதும், அதற்கான பணத்தை சேமித்து, நமது வாங்கும் திறனை அதிகரித்துவிட்டு, பணம் கொடுத்து வாங்க வேண்டும். கடன் அட்டை கொண்டோ, நண்பர்கள் அல்லது வங்கியில் கடன் வாங்கியோ, வாங்கக் கூடாது. சொந்த தொழில் தொடங்க, வீடு வாங்குவதற்காக தவிர, மற்ற சமயங்களில் கடன் வாங்க வேண்டாம்.  தொழில் தொடங்க அதிக முலதனம் தேவை. வீடு என்பது அத்தியாவசியமான விஷயம், அவைகளுக்கு மட்டும் கடன் வாங்கலாம். அவைகளுக்கு வட்டி விகிதம் குறைவு. மேலும், அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு. அவைகளுக்கு கூட, எவ்வளவு குறைவாக கடன் வாங்க இயலுமோ, அவ்வளவே வாங்க வேண்டும். அதையும் கூட, வெகு சீக்கரத்தில் அடைத்து விட வேண்டும். சொந்தமாக பணம் சேர்த்து, வீடு வாங்கினால், தொழில் தொடங்கினால், இன்னும் உசிதம். கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை.

2 comments: